சொக்லேட்டுக்குள் வைத்து இலங்கைக்கு கடத்தப்படும் போதைப்பொருட்கள்!

கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நீண்ட காலமாக நாட்டுக்குள் ஐஸ் போதைப்பொருளை சொக்லேட்டில் மறைத்து வைத்து கடத்தியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில்  கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே, இந்தக் கடத்தல் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிரிபத்கொட பகுதியில் சொகுசு காரொன்றை சோதனையிட்ட போது, சொக்லேட் உறைகளில் பொதி செய்யப்பட்ட சுமார் ஐந்து கிலோ ஐஸ் போதைப்பொருள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, கடத்தல்காரர் ஒருவருக்கு சொந்தமான வத்தளை மற்றும் கணேமுல ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள் தொடர்பிலான தகவல்களும் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்துள்ளன.

தற்போது துபாயில் பதுங்கியிருக்கும் போதைப்பொருள் வியாபாரிகளான நிபுன மற்றும் நந்தசேன ஆகியோரின் அறிவுறுத்தலிலேயே, இவ்வாறு போதைப்பொருள்ள கடத்தப்பட்டுள்ளதாக அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.