மருந்து விலைகள் அதிகரிப்பு - வர்த்தமானி இரண்டு நாட்களில் வெளியாகும்!

டொலருக்கு நிகராக 60 அத்தியாவசிய ஒளடதங்களின் விலைகளை அதிகரித்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் வெளியிடப்பட உள்ளதாக ஒளடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றைய தினத்திற்குள் விலை கட்டுப்பாட்டு சபையினால் புதிய விலை திருத்தம் வழங்கப்பட உள்ளதாக அந்த அமைச்சின் செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

இதையடுத்து அதனை சட்ட வரைஞர் திணைக்களத்தின் அனுப்பி,ஈ வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி நேற்றுமுன்தினம் 230 ரூபா வரையில் அதிகரித்ததை அடுத்து, ஒளடத இறக்குமதியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விளக்கமளித்து 50 சதவீத விலை அதிகரிப்பை கோரியிருந்தனர்.

இதன்படி ஒளடத உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் ஒளடத விலை கட்டுப்பாட்டு குழுவிற்கு அதனை முன்வைத்து, 20 சதவீத விலை அதிகரிப்புக்கு அனுமதியை பெற்றிருந்தது.

எனினும் நேற்றைய தினம் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 260 ரூபாய் வரையில் உயர்வடைந்தது.

எனவே, இதற்கு சமாந்தரமாக மீண்டும் விலை மீளாய்வை மேற்கொள்ள விலை கட்டுப்பாட்டு குழுவுக்கு அனுப்பியுள்ளதாக இராஜாங்க அமைச்சின் செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.