கொள்ளுப்பிட்டி விபத்தில் தலைமறைவான சாரதி விமான நிலையத்தில் வைத்து கைது



கொள்ளுப்பிட்டி பகுதியில் முச்சக்கரவண்டியுடன் கார் மோதியதில் ஏற்பட்ட விபத்தின் பின்னர் நாட்டை விட்டு தப்பிச் சென்ற காரின் சாரதி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீண்டும் இலங்கைக்கு திரும்பிய போது இந்த கைது சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கடந்த 10ஆம் திகதி காலை கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் முன்னால் சென்ற முச்சக்கரவண்டியுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார்.

விபத்தை அடுத்து காரை ஓட்டிச் சென்ற சாரதி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

எப்படியிருப்பினும் விபத்தின் போது, ​​காரின் பின்னால் பயணித்த பெண் ஒருவரை அந்த இடத்தில் மேலும் மூன்று பெண்கள் கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான பெண்ணிடம் வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்ட கொள்ளுப்பிட்டி பொலிஸார் தாக்குதலுக்கு உதவிய இரு பெண்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வெள்ளவத்தை மற்றும் எல்லக்கல பிரதேசத்தில் வசிக்கும் சுகாதார சேவைகளை வழங்கும் தனியார் நிறுவனமொன்றின் ஊழியர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.