35 வருடங்களின் பின் நாடு திரும்பிய பெண் : நோய் குணமடைய பருகிய நீரால் உயிரிழப்பு



புத்தளம் - மதுரங்குளிய, முக்குத்தொடுவாவ பிரதேசத்தில் நோய்களை குணப்படுத்துவதாக கூறப்பட்ட இடத்தில் வழங்கப்பட்ட நீரை பருகிய பெண் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

முந்தலம, வில்பொத்த பகுதியைச் சேர்ந்த ரேணுகா இந்திரகாந்தி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 35 வருடங்களாக மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்த இவர், இறுதியாக டுபாயில் பணிபுரிந்து வந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் நாடு திரும்பிய குறித்த பெண், மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததால் குணமடைய குறித்த இடத்திற்கு சென்றதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்போது போத்தல்களில் அடைக்கப்பட்ட சில தண்ணீர் வகைகளை குடிக்கக் கொடுக்கப்பட்டதாகவும், பின்னர் உடல் நிலை மோசமாகி அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்ச்சத்து குறைபாடு மற்றும் கடுமையான சுவாச கோளாறு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்  அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.