அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அபார வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்ப் பதவிக்கு வருவது, இலங்கையின் தேசிய பொருளாதாரம் மற்றும் நிதியமைப்பை பலப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமையும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டியுடர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
ஜோ பைடனின் ஜனநாயக கட்சியின் ஆட்சிக் காலத்தில் விதிக்கப்பட்ட அரசியல், சமூக, பொருளாதார அழுத்தங்களில் இலங்கை போன்ற நாடுகள் தப்பித்துக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதற்கமைய, எமது நாட்டின் தேசிய பொருளாதாரத்தையும் தேசிய பாதுகாப்பையும் இணக்கமான சூழலில் பேண முடியும்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சி உலகிற்கு கொண்டு வந்த நிதி முதலாளித்துவத்தின் ஊடாக இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதாரத்தை சுருங்க செய்தது. எனினும் ட்ரம்பின் நிர்வாகத்திற்கு கீழ் அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட வாய்ப்பு குறைவாக காணப்படும்.
அதன் மூலம், அமெரிக்க நிதிப் பொருளாதாரம் மற்றும் அதை வழங்கும் துறைகளின் சிக்குண்டுள்ள சகாப்தம் முடிவுக்கு வரலாம்.
நமது நாடு நிதிப் பொருளாதாரத்தை விட, உற்பத்திப் பொருளாதாரத்துக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பு ஏற்படும்.
எமது வெளிவிவகாரக் கொள்கையை அமுல்படுத்தி இலங்கையின் தேசியப் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், கிழக்கு, மேற்கு மற்றும் உலகில் உள்ள ஒவ்வொரு அமைப்புக்களுடனும் செயற்படுவதன் மூலம் நிதியமைப்பை வலுப்படுத்தவும் முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார் .
மேலும் பொருளாதார ரீதியாக பலமான அமெரிக்காவை எதிர்பார்க்க முடியும் எனவும் அதேவேளை உலகளாவிய தலையீடுகள் மீதான போக்கு மட்டுப்படுத்தப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் வெளிவிவகார கொள்கையை அமுல்படுத்துவதற்கு ட்ரம்ப்பிடம் இருந்து எந்த அழுத்தமும் இருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.