வரிசையில் காத்திருக்க வேண்டாம், திங்கட் கிழமை முதல் எரிவாயு விநியோகம் - அறிவித்தது லிட்ரோ நிறுவனம்

எதிர்வரும் திங்கட் கிழமை முதல் எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 

எரிவாயுவை தாங்கி கப்பல் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை இலங்கையை வந்தடையும் என லிட்ரோ நிறுவனத் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.  


கப்பல் வருகையில் தாமதம்

நேற்றையதினம் இலங்கைக்கு வரவிருந்த 3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல், நாட்டுக்கு வருவதற்கு மேலும் தாமதமாகும் என லிட்ரோ நிறுவனம்  நேற்று அறிவித்திருந்தது.

குறித்த கப்பல் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக  இந்தியாவுக்கு சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 


வரிசையில் காத்திருக்க வேண்டாம்

இதன் காரணமாக, இன்றைய தினமும் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறமாட்டாது எனவும்  பொதுமக்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் எனவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.  

கடந்த மூன்று நாட்களும் லிட்ரோ நிறுவனம் எரிவாயு விநியோகத்தை  இடைநிறுத்தியிருந்ததுடன், அடுத்த  மூன்று நாட்களும் எரிவாயுவினைப் பெற்றுக் கொள்ள பொதுமக்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.