படிக்க கூடாது..! 9 வயது சிறுமியை தழும்பு வரும்வரை தாக்கிக் காயப்படுத்திய கொடூர தாய்.!

9 வயது சிறுமியை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் தாய் ஒருவர் மின்னேரியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரித்தல  பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

இவர் தனது கல்வியை பூர்த்தி செய்யாத காரணத்தினால் தனது பிள்ளைகளும் படிக்க கூடாது என நினைத்து 9 வயது சிறுமியை தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் முதுகுப் பகுதியில் முப்பதுக்கும் மேற்பட்ட தழும்புகள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொலைபேசி அழைப்பின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் சிறுமியின் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பெண்ணின் கணவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் சந்தேக நபர்கள் இருவரும் ஹிங்குராங்கொட  நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சிறுமியை அநுராதபுரம் சிறுவர் காப்பகத்திற்கு அனுப்பி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் மனநலம் பாத்திக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமியின் தாயை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.