ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரான ‘வெலிகம சஹான்’ என்று அழைக்கப்படும் சஹான் சிசி கலும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இந்தியாவின், சென்னையில் இருந்து நேற்றிரவு நாடு கடத்தப்பட்ட நிலையில், விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெலிகம பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இவர், பாணந்துறை மற்றும் களுத்துறையில் நடந்த இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களிலும், மட்டக்குளி பகுதியில் “பத்தே சுரங்க” என்ற நபரை சுட்டுக் கொன்ற சம்பவத்திலும் முக்கிய சந்தேக நபர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், அவர் ஒரு ஒப்பந்தக் கொலையாளி என்றும் குறிப்பிடப்படுகிறது.
மாத்தறை மற்றும் பாணந்துறை பகுதிகளில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அத்தோடு ஹரக் கட்டா, மிடிகம சூட்டி மற்றும் குடு சலிந்து உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்காக அவர் துப்பாக்கிதாரியாக செயல்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவர் மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் களுத்துறை குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.