வற் பதிவு தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முடிவு

வருடாந்தம் 80 மில்லியன் ரூபா இலாபமீட்டும் ஒவ்வொரு வியாபாரமும் அல்லது தொழிற்துறையும் வற் வரியில் (VAT) பதிவு செய்யப்பட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

யட்டியந்தோட்டையில் இன்று(18) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துக்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, பதிவு செய்யப்பட்ட வற் பதிவு சான்றிதழ் அனைவருக்கும் பார்க்கக் கூடிய வகையில் காட்சிப்படுத்தப்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், தற்போது வற் வரி செலுத்துவதற்கான வரம்பு ஆண்டுக்கு 80 மில்லியன் ரூபா. விரைவில் ஆண்டு வருவாயை 60 மில்லியன் ரூபாவாக குறைக்க தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும்.

வற் பதிவு இலக்கம் காட்சிப்படுத்தப்படாவிட்டால், அவ்வாறானவர்களுக்கு எதிராக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு எவ்வித தடையும் இல்லை என கூறியுள்ளார்.