இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு விவகாரம்! சீன தரப்பிலிருந்து வெளியான தகவல்


இலங்கை, சீனாவுக்கு செலுத்த வேண்டிய 9.95 பில்லியன் டொலர் கடன்களை மறுசீரமைப்பதற்கு பதிலாக, இலங்கையில் உள்ள சீனாவின் திட்டங்களுக்கு அந்த கடனை ஈடு செய்யும் யோசனை ஒன்றை சீனா இலங்கைக்கு அறிவித்துள்ளதாக, வெளியான செய்தி முற்றிலும் தவறானது என்று சீன தூதரக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு ஊடகம் ஒன்றிடம் பேசிய போதே அவர் இவ்வாறு மறுப்பு வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, இராஜதந்திர தரப்புகளில் இருந்து இந்தத் தகவலைப் பெற்றுள்ளதாக கூறி செய்தி தாள் ஒன்று வெளியிட்ட செய்தியில், இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைக்க சீனா உடன்படவில்லை, அதாவது திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடிக்க விரும்பவில்லை.

இந்த நிலையில், கடன் கொடுப்பனவை பிற்போடுவதற்குப் பதிலாக இலங்கையில் சீனத் திட்டங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப் போவதாக சீனர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் பொருள், இலங்கையின் துறைமுகங்கள், விமான நிலையங்கள், சர்வதேச மாநாட்டு அரங்குகள், மைதானங்கள், நெடுஞ்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், தாமரை கோபுரம் மற்றும் பல கட்டுமானங்களை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறது என்று தெரிவிக்கப்படிருந்தது. அவற்றில் இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதில் முக்கியமான நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் மற்றும் மத்தள விமான நிலையம் ஆகியவை அடங்கும் என்றும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் முக்கியப் பிரச்சினையாக இருந்த சீனக் கடன் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு வழியாக இலங்கை அரசாங்கம் இதை ஏற்றுக்கொள்ளலாம் என்றும் குறித்த செய்தித்தாள் கருத்து தெரிவித்திருந்தது. எனினும் இந்த செய்தியை சீன தூதரக பேச்சாளர் மறுத்துள்ளார்.

நுரைச்சோலை ஆலையின் கட்டுமானத்திற்காக, முதல் கட்டத்தில் 155 மில்லியன் டொலர்கள், இரண்டாம் கட்டத்தில் 300 மில்லியன் டொலர்கள் மற்றும் மூன்றாம் கட்டத்தில் 891 மில்லியன் டொலர்கள் பெறப்பட்டுள்ளன. 214 மில்லியன் டொலர் செலவில் மொரக்கஹகந்த அபிவிருத்தித் திட்டம் மற்றும் பல நீர்ப்பாசனத் திட்டங்கள் உள்ளன.

உலக அரசியலில், சீனாவுக்கு எதிரான முகாமுக்கு இலங்கை தெளிவான விசுவாசத்தைக் காட்டுவதன் காரணமாகவே இலங்கைக்கு வழங்கிய கடனை மறுசீரமைக்க சீனா விரும்பவில்லை என்பது தெளிவாகிறது.

இலங்கை அரசாங்கம் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுடன் இலங்கை நட்புறவுடன் உள்ளது. அதேநேரம் இராஜதந்திர உறவுகளுக்கு மேலதிகமாக சர்வதேச நாணய நிதியத்துடனான, இலங்கையின் பரிவர்த்தனைகளில் சீனா மகிழ்ச்சியடையவில்லை என்றும் செய்தித்தாள் தெரிவித்திருந்தது. எனினும் இந்த செய்தியையும் சீன தூதரக பேச்சாளர் மறுத்துள்ளார்.

இதேவேளை இலங்கையின் பெரும்பாலான கடன்கள் சீனாவிடமிருந்து பெறப்பட்டுள்ளன. இலங்கையின் கடனில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை சீனக் கடனாகும். இதன் விளைவாக, இலங்கையின் கடனை உறுதிப்படுத்துவதில் சீனக் கடனை மறுசீரமைப்பது மிகவும் முக்கியமானது, அதாவது சீனா தனது கடன் தவணைகளின் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடிக்க ஒப்புக் கொள்ள வேண்டும்.

இலங்கையின் சீனக் கடன் மறுசீரமைக்கப்படும் வரை சர்வதேச நாணய நிதியத்தின் கடன்களை மறுசீரமைப்பதில் இலங்கைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் தெளிவாக முடிவடையும் வரை இந்த நெருக்கடிக்கு தீர்வு காண்பது கடினம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.