மருந்து தட்டுப்பாட்டால் விரைவில் மரணங்கள் நிகழலாம்-மருத்துவர்கள் எச்சரிக்கை!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்து தட்டுப்பாட்டால் விரைவில் மரணங்கள் நிகழலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.அத்தியாவசிய மருந்துகள் இல்லாததால் மருத்துவர்கள் உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகளை ஒத்திவைக்க வேண்டியிருந்தது என்று மருத்துவர்களை மேற்கோள்காட்டி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.80 வீதமான மருந்துகள் இலங்கையினால் இறக்குமதி செய்யப்படுகின்றன. எனினும், அந்நியச் செலாவணி தட்டுப்பாடு காரணமாக, மருந்து இறக்குமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல மருந்துகளுக்கு சந்தையில் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.மஹரகம வைத்தியசாலை  புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நாட்டின் முதன்மையான மருத்துவமனையாகும். இதில் 950 படுக்கைகள் உள்ளன.ஆனால் அங்குள்ள நோயாளிகள், அவர்களது உறவினர்கள், மருத்துவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மருந்துகள் பற்றாக்குறையால் அத்தியாவசிய சுகாதார பராமரிப்பு மற்றும் அறுவை சிகிச்சையை அதிகாரிகள் ஒத்திவைக்க வேண்டியிருந்தது. இந்த நிலை புற்றுநோயாளிகளுக்கு மிகவும் மோசமானது என வைத்தியர் ரொஷான் அமரதுங்க தெரிவித்தார்.சில நாட்களில் நாங்கள் காலையில் அறுவை சிகிச்சைகளைத் திட்டமிடுகிறோம், ஆனால் சில நேரங்களில் மருந்துகள் பற்றாக்குறையால் அந்த நாளில் செய்ய முடியாது என்றும் விரைவில் நிலைமை சீரடையவில்லை என்றால், பல நோயாளிகள் இறக்கும் தருவாயில் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.