தமிழர் பகுதியில் அரங்கேறும் கொடுமை - மாணவியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்த முயன்ற அதிபர்

உயர்தரத்தில் கல்விகற்கும் மாணவியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்த முயன்றதாக தெரிவித்து பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த மாணவி விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வருகின்றார்.இந்த நிலையில் கடந்த மாதம் 21 ஆம் திகதி மாணவியை தனது அலுவலகத்திற்கு அழைத்த அதிபர், மாணவியை பாலியல் வன்புணர்விற்குட்படுத்த முயன்றுள்ளார்.இதனையடுத்து மாணவி அதிபரின் பிடியிலிருந்து தப்பி சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அறிந்த நான்குபேர் அடங்கிய குழுவினர் கடந்த நான்காம் திகதி தம்மை குற்றப்புலனாய்வுப்பிரிவினர் எனத் தெரிவித்து பாடசாலைக்குள் புகுந்து அதிபரை தாக்கியதுடன் காணொளியையும் பதிவு செய்துள்ளனர்.

அதிபர் மீதான தாக்குதல் அடங்கிய காணொளி வெளியான நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி நேற்றையதினம்(10) மட்டக்களப்பு தலைமையக காவல்துறைக்கு சென்று அதிபருக்கு எதிராக முறைப்பாடு அளித்துள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியை வைத்தியசாலையில் அனுமதித்த காவல்துறையினர் அதிபரை காவல் நிலையத்துக்கு வரவழைத்து கைது செய்துள்ளனர். அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதேவேளை, சிஐடி என கூறியபடி வந்து தன்மீது தாக்குதல் நடத்தியவர்களை தனக்குத் தெரியாது என காவல்துறையிடம் தெரிவித்த அதிபர், வெளியாகிய காணொளியை ஆதாரமாக வழங்கி காவல் நிலையத்தில் அவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.