பேஸ்புக் விளம்பரத்தினை நம்பி மசாஜ் நிலையத்துக்கு வேலைக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்


 

மாத்தறை - தலரம்ப பகுதியில்  முகப்புத்தக விளம்பரத்தினை நம்பி மசாஜ் நிலையமொன்றிற்கு வேலைக்கு சென்ற இளம் யுவதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவமொன்று மே தினமன்று பதிவாகியுள்ளது.

மாத்தறை பகுதியில் உள்ள மசாஜ் நிலையமொன்றில் வேலை வாய்ப்பு உள்ளதாக முகப்புத்தகத்தில் காணப்பட்ட விளம்பரத்தினை நம்பி யுவதி மசாஜ் நிலையத்திற்கு வந்த போது மேலாளரால் துன்புறுத்தப்பட்டு தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த யுவதியை  முகாமையாளர் வெளியில் செல்லவிடாமல் அங்கேயே பூட்டி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  தலரம்ப பகுதிக்கு சென்று மசாஜ் மையத்தை சுற்றி வளைத்த பொலிஸார் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

இதன்போது மசாஜ் நிலைய உரிமையாளர் போல் நடித்து யுவதியுடன் சென்றவர் உண்மையான உரிமையாளர் இல்லை என யுவதி அங்கு அடையாளம் காட்டியுள்ளார்.

விசாரணையில் யுவதியின் தலை, கால், கழுத்தில் காயங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து யுவதியை மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக பொலிஸார் அனுமதித்துள்ளனர்.

மேலும் மசாஜ் நிலைய முகாமையாளரை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு கூறியிருந்த நிலையில், நேற்றைய நிலவரப்படி சந்தேகநபர் பொலிஸ் நிலையத்திற்கு வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூல் விளம்பரங்களை நம்பி  இளைஞர்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் வழக்கு அதிகம் என்பதுடன், பெரியவர்கள் இது தொடர்பில் கவனமாக இருக்க வேண்டும் எனவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்கவின் பணிப்புரைக்கமைய மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் நிலைய பொறுப்பதிகாரி வருணி போகஹவத்த உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.