தாமரை கோபுரத்தை பார்க்க குவியும் மக்கள் கூட்டம்- முதல் நாள் வருமானம் 15 இலட்சம்!

பொதுமக்களின் பாவனைக்காக நேற்று திறந்து வைக்கப்பட்ட தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை பார்வையிடுவதற்கான நுழைவுச்சீட்டு விற்பனை மூலம் நேற்று ஒரு மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்படி முதல் நாள் வருமானம் 15 இலட்சத்தை அண்மிக்கும் என தாமரைக் கோபுரத்தின் தனியார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, நேற்று 2612 பேர் கொண்ட குழுவொன்று தாமரை கோபுரத்தை பார்வையிட வந்துள்ளதாகவும் அவர்களில் 21 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கொழும்பில் 30,600 சதுர மீற்றர் பரப்பளவில் நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுர கட்டடம் நேற்று முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

அதன்படி வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் வார இறுதி நாட்களில் பிற்பகல் 12 மணி முதல் இரவு 12 மணி வரையிலும் தாமரை கோபுரத்தை பார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.நேற்று இரவும் தாமரை கோபுரத்தை பார்வையிட பெருமளவான மக்கள் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.