கடலட்டைக் கடத்தல் முறியடிப்பு


இந்தியா தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 1100 கிலோ நிறையுடைய, இந்திய மதிப்பில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான பதப்படுத்தப்பட்ட கடலட்டையை இராமநாதபுரம் சிறப்பு தனிப்படை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். தனுஷ்கோடி கடல் வழியாக நள்ளிரவு வேளை நாட்டுப்படகில் சட்டவிரோதமாக மர்ம பொருள் ஒன்று இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட இருப்பதாக இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து வேதாளை கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளை சிறப்பு தனிப்படை பொலிஸார் சோதனைக்குட்படுத்தினர். 

ஒரு படகில், சுமார் 20 மூடைகளில் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள், கைப்பற்றப்பட்ட கடலட்டை மூட்டைகளை மண்டபம் வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று எடை போட்டு பார்த்ததில் இந்திய மதிப்பில் 10 இலட்சம் ரூபா நிறையுடைய, 1100 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இருந்தமை தெரியவந்தது. 

கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருந்த நாட்டுப்படகை பறிமுதல் செய்த கடலோர பாதுகாப்பு குழும பொலிஸார், படகின் உரிமையாளர் மற்றும் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.