உலகளாவிய பதற்றங்களை அதிகரிக்கும் ஆத்திரமூட்டல்களை நாடுகள் தவிர்க்க வேண்டும் - ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீனத் தூதுவர் கி ஸெங்கொங் (Qi Zhengong) ஐ சந்தித்துள்ளார்.

ஒரே சீனா கொள்கை மற்றும் நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியன தொடர்பில் ஜனாதிபதி இதன்போது அவதானம் செலுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ட்விட்டரில் பதிவொன்றில், பிராந்திய ஒருமைப்பாடு தொடர்பான ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் கொள்கைகளுக்கு இலங்கையின் வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய உலகளாவிய பதற்றங்களை மேலும் அதிகரிக்கும் ஆத்திரமூட்டல்களை நாடுகள் தவிர்க்க வேண்டும் என்றும் பரஸ்பர மரியாதை, நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாமை, அமைதியான ஒத்துழைப்பு மற்றும் மோதல்களை தவிர்த்தல் என்பன முக்கியம் என்றும் ஜனாதிபதி விளக்குகிறார்.