முட்டை கட்டுப்பாட்டு விலையில் திருத்தம்!

முட்டை உற்பத்திச் செலவைக் கருத்தில் கொண்டு தற்போதைய கட்டுப்பாட்டு விலையில் திருத்தம் செய்யப்பட்டு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அது நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

பல்பொருள் அங்காடிகளில் பொதி செய்யப்பட்ட முட்டைகளை விற்பனை செய்வதற்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலை நியாயமற்றது என்பதனால், பொதியிடல் செலவு உட்பட புதிய கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.இதற்கமைய பொதி செய்யப்பட்ட வெள்ளை மற்றும் சிவப்பு முட்டைகளுக்கு தனித்தனியாக கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படவுள்ளது.

இதேவேளை, அதிக விலையில் முட்டை விற்பனை செய்யும் வர்த்தகர்களைக் கண்டறிவதற்கான சோதனை நடவடிக்கையினை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முட்டை ஒன்றினை 50 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு வர்த்தக அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டு வர்த்தக அமைச்சினால் அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

இதனையடுத்து உற்பத்தியாளர்களினால் குறித்த விலை நிர்ணயம் பரிசீலிக்கப்பட்டு  முட்டை ஒன்றினை 50 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.