சமையல் எரிவாயு தட்டுப்பாடு மேலும் ஒரு வாரம் வரை நீடிக்கும்!

நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மேலும் ஒரு வாரம் வரை நீடிக்கும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

நாட்டை வந்தடைந்துள்ள கப்பலில் இருந்து எரிவாயுவினை தரையிறக்குவதற்கான நடவடிக்கை இன்றும்(வியாழக்கிழமை) முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக நாட்டை வந்தடைந்த 2 ஆயிரத்து 600 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயு தாங்கிய கப்பலில் இருந்து, சமையல் எரிவாயுவினை தரையிறக்கும் நடவடிக்கை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளாந்தம் 900 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவினை நாடு முழுவதிலும் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சமையல் எரிவாயு மற்றும் மின் துண்டிப்பு காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இயங்கிய பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்கது.