கொழும்பில் மஹிந்த ராஜபக்ஷ தங்கிருந்த வீடு தொடர்பில் மற்றுமொரு சர்ச்சை : மஹிந்தவின் ஊடகப்பேச்சாளர் விளக்கம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு விஜேராமவில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறி மூன்று வாரங்கள் கடந்துவிட்ட நிலையில், இன்னும் அதை உத்தியோகபூர்வமாக பொது நிர்வாக அமைச்சகத்திடம் ஒப்படைக்கவில்லை என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ச தெரிவித்திருந்த நிலையில் அதற்கு மஹிந்த ராஜபக்ஷ தரப்பு அதற்கு விளக்கமளித்துள்ளது.
இதுதொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக பேச்சாளர் மனோஜ் கமகே வெளியிட்டுள்ள தகவலில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தை இதுவரையில் அரசுக்கு ஒப்படைக்கவில்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.அரசாங்கம் குறிப்பிடும் பொய்களில் இதுவும் ஒன்றாகவே காணப்படுகிறது.
விஜேராம இல்லத்தை ஒப்படைக்குமாறு ஜனாதிபதி செயலகம் 2025.09.24 ஆம் திகதியன்று தான் உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பி வைத்துள்ளது.
நிச்சயிக்கப்பட்ட காலம் ஏதும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை.
இந்த உத்தியோகபூர்வ இல்லத்தில் அரசுக்கு சொந்தமான சொத்துக்களும்,ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவகத்துக்கு சொந்தமான சொத்துக்களும் உள்ளன.
இந்த சொத்துக்களை மதிப்பீடு செய்து அடையாளப்படுத்துமாறு குறித்த அரச அதிகாரிகளுக்கு நாங்கள் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தோம்.
அதிகாரிகள் இங்கு வருகைத் தந்து குறித்த மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதை தாமதப்படுத்தியதால் தான் இந்த வீட்டை ஒப்படைக்கவில்லை.
இல்லையென்றால் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ 'மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கு சொந்தமான சொத்துக்களை லொறியில் ஏற்றிச் சென்று விட்டார்' என்றும் குறிப்பிடுவார்.
இவ்வாறான பின்னணியில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் அதிகாரிகள் இந்த வீட்டை நேற்று காணொளியாக பதிவு செய்துள்ளார்கள்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது சேறு பூசுவதற்கு ஏதாவதொரு விடயத்தை தேடிக்கொண்டு ஊடக கண்காட்சி நடத்துகிறார்கள் என்றார்.