முதியோர் கொடுப்பனவினை பெறுவதில் தொடர்ந்தும் இழுபறி!

முதியவர்களுக்கு என வழங்கப்படுகின்ற கொடுப்பனவு 20ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரை அருகில் உள்ள தபால் நிலையங்களில் பெற்று வரப்பட்டது.தற்பொழுது சமுர்த்தி வங்கியின் ஊடாக பெற்றுக்கொள்ள வேண்டுமென தபால் அதிபர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மக்கள் தமது முதியோர் கொடுப்பனவினை பெற பல கிலோமீட்டர் தூரங்களில் இருந்தும் சமுர்த்தி வங்கிக்குச் சென்று தமது பெற பணத்தை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது பணத்தை பெற வேண்டுமாயின் அதற்கான வங்கிக் கணக்கினை புதிதாக திறக்க வேண்டும் என சமுர்த்தி வங்கியினர் தெரிவித்துள்ளனர்.அப்படி திறந்தபின்பும் தமக்கு இன்னும் பணம் கிடைக்கப்பெறவில்லை எனவும் கிடைத்தவுடன் கிராம சேவையாளர் ஊடாக தெரியப் படுத்திய பின் வந்து கொடுப்பனவினை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக தமக்கு வழங்கப்படுகின்ற 1900 ரூபாய் பணத்தைப் பெறுவதற்காக 2,000 ரூபாய்க்கு அதிகமான பணத்தை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பலர் கவலை தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது வழங்கப்படுகின்ற 1,900 ரூபாய் பணத்தை நம்பியே சில முதியவர்கள் தமது அத்தியா வசிய செலவினை மேற்கொண்டு வந்தனர். அப்பணம் இதுவரை கிடைக்கப் பெறவில்லை எனவும், தபால் நிலையங்கள் ஊடாகவே தமது பணத்தினை பெறுவது இலகுவாக அமைந்துள்ளது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.குறித்த உதவி பணத்தினை தபால் நிலையங்களில் ஊடாகவே பெறுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒழுங்கமைத்து தரும்படி முதியவர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.