குழப்பநிலை.. : குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் பதற்ற நிலை

 குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் மக்கள் குழப்பமடைந்துள்ளதால் அசாதாரண நிலை தொடர்ந்து வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கணினி கட்டமைப்பில் மீண்டும் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் செயற்பாடு இன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான அறிவிப்பை தொடர்ந்து மக்கள் குழப்பமடைந்திருந்தனர்.

இதன்போது திணைக்களத்தின் முன்பக்க கதவின் கண்ணாடியும் உடைக்கப்பட்டுள்ளதுடன், அனுமதியின்றி ஆர்ப்பாட்டக்காரர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்குள் நுழைந்ததாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இதேவேளை நேற்றைய தினம் விண்ணப்பங்களை கையளித்தவர்களுக்கு இன்றைய தினமும், இன்று விண்ணப்பங்களை கையளித்தவர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமையும் கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதை ஆர்ப்பாட்டக்காரர்கள் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக வரிசைகளுக்கு சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 


--------------------------------------------------------------------------------

முதலாம் இணைப்பு


கொழும்பு - பத்தரமுல்ல பகுதியில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கணினி கட்டமைப்பில் மீண்டும் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் செயற்பாடு இன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை கையளிப்பதற்காக தூரப்பிரதேசங்களில் இருந்து வந்தவர்கள் குழப்பமடைந்து இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை பத்தரமுல்ல மற்றும் தலவத்துகொட பகுதிகளில் பாரிய போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.