புதிய அமைச்சர் ஹரினின் செயற்பாட்டை கண்டித்து, பதவி விலகிய சுற்றுலாத்துறை தலைவர்!

சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும் கலந்துரையாடுவதற்கும் அமைச்சரை சந்திக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, இலங்கை சுற்றுலாத்துறையின் தலைவர் கிமர்லி பெர்னாண்டோ இன்று தனது பதவி விலகல் கடிதத்தை சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிடம் கையளித்துள்ளார்.

புதிய தலைவர் மற்றும் பணிப்பாளர் சபையை நியமிக்க அமைச்சர் உத்தேசித்துள்ளார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்தநிலையில், அபிவிருத்திகளை மீளாய்வு செய்வதற்கும், பின்பற்றப்பட்ட சிறந்த நடைமுறைகளுக்கு வழிகாட்டுவதற்கும் அமைச்சரை சந்திக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது என்று கிமர்லி தமது கடிதத்தில் கூறியுள்ளார்.

கடந்த மே 21 மற்றும் 23 திகதிகளில் அமைச்சரால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.

குறிப்பாக நாடு இன்று எதிர்நோக்கியுள்ள கடினமான சூழ்நிலையில் அமைச்சர் வெளிப்படுத்திய செயற்பாடு விரும்பத்தக்கதல்ல என்றும் கிர்மலி பெர்ணான்டோ தமது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.