தாமரை கோபுரத்திலிருந்து விழுந்து உயிரிழந்த மாணவி : வெளியான புதிய தகவல்

புதிய இணைப்பு 

கொழும்பு தாமரைக் கோபுரத்திலிருந்து நேற்று (07) வீழ்ந்து உயிரிழந்த மாணவியும், கொம்பனித் தெருவில் உள்ள தொடர்மாடிக் குடியிருப்பு தொகுதியிலிருந்து அண்மையில் வீழ்ந்து உயிரிழந்த இரண்டு மாணவர்களும் நண்பர்கள் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மூவரும் ஒரே சர்வதேச பாடசாலையைச் சேர்ந்தவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கொம்பனித் தெருவில் உள்ள தொடர்மாடிக் குடியிருப்பு தொகுதியிலிருந்து சர்வதேச பாடசாலை ஒன்றில் பயிலும் 15 வயதுடைய மாணவி ஒருவரும், மாணவர் ஒருவரும் வீழ்ந்து உயிரிழந்தனர்.

அவர்களது உயிரிழப்புக்குப் பின்னர், தமது மகள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாக நேற்றைய தினம் தாமரைக் கோபுரத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்த மாணவியின் தந்தை, வாக்குமூலம் வழங்கியுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும், குறித்த மாணவி உயிரிழப்பதற்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


முதலாம் இணைப்பு 

கொழும்பு (Colombo) தாமரை கோபுரத்தில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்பட்ட பாடசாலை மாணவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் கொழும்பு - கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளார்.

நேற்றையதினம் சாதாரண உடையில் தாமரை கோபுரத்திற்கு வந்த பாடசாலை மாணவி, அங்கிருந்த காவலர்களை தவிர்த்துவிட்டு அந்த இடத்திலிருந்து கீழே குதித்து தவறான முடிவெடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், அவரது பையில் இருந்து பாடசாலை சீருடை, புத்தகம் மற்றும் தொலைபேசி ஆகியவை காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டதுடன், மற்றொரு இடத்தில் அவரது ஜோடி காலணிகளையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளார்.

அத்துடன், தாமரை கோபுரத்தில் உள்ள சிசிரிவி காட்சிகள் அவர் தவறான முடிவெடுப்பதற்கு வந்ததை உறுதி செய்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். 

இதன் படி, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.