கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவைக் கொலை செய்த இரு துப்பாக்கிதாரிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட உள்ளதாகவும் இவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
கடந்த ஜூலை மாதம் 8ஆம் திகதி அத்துருகிரியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து, எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற அனுமதியின் பேரில் சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் போது ஏனைய குழுவினர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கிளப் வசந்தவைக் கொல்ல வந்த இரண்டு துப்பாக்கிதாரிகளும் முன்னாள் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இக்கொலைக்குப் பின்னர் அவர்கள் தப்பிச் செல்வதற்காக விசேட வாகனம் ஒன்றும் தயார் செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
அதன் ஊடாக அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் உள்ளிட்ட குழுவினர் அத்துரிகிரிய பிரதேசத்தில் 6 மாத காலத்திற்கு வாடகை வீடொன்றையும் எடுத்துள்ளதாகவும், அதற்காக 06 இலட்சம் ரூபா பணத்தை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்கு தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் கயங்க மாரப்பனவின் ஆலோசனையின் பேரில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.