தேசபந்துவைத் தேடி சாகலவின் அலுவலகத்திற்குள் நுழைந்த சி.ஐ.டி

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனைத் தேடி, மாத்தறை மொரவக்கவில் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்கவின் அலுவலகத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

அதற்கமைய, தேசபந்து தென்னகோனை காணும் இடத்திலேயே கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் நேற்று திறந்த பிடியாணை பிறப்பித்ததன் பின்னணியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, தனது சட்டத்தரணிகள் ஊடாக தேசபந்து தென்னகோன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்  ரிட் மனுவை சமர்ப்பித்து, இந்தக் கைது நடவடிக்கையானது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோரின் அழுத்தங்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அவரின் ரிட் மனுவின் பரிசீலனை நிறைவுக்கு வந்துள்ளது.

அதன்படி, குறித்த மனுவின் தீர்ப்பை எதிர்வரும் 17ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.