உளவுக் கப்பல்களுக்கு அனுமதி இல்லை! சீனக் கப்பல் தொடர்பில் ரணிலின் நிலைப்பாடு

உளவு கப்பல்கள் இலங்கைக்குள் வருவதற்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படாதென சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த ஒரு வருட காலப்பகுதிக்குள் இலங்கையின் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட சீனாவின் இரு கப்பல்களும் உளவு கப்பல்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கான எந்தவொரு ஆதரங்களும் இல்லையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியோக செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தியா, சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலிருந்தும் இலங்கைக்கு பயணிக்கும் இராணுவ கப்பல்கள் இலங்கையின் துறைமுகங்களில் நங்கூரமிடப்படுவதற்கு அனுமதி வழங்கப்படுமெனவும் கடந்த காலங்களிலும் இவ்வாறான அனுமதிகள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை துறைமுகங்களில் பல நாடுகளின் கப்பல்கள் நங்கூரமிடப்பட்டாலும் சீனாவின் கப்பல்கள் குறித்து மாத்திரம் பேசப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்நிலையில், யுவான் வாங் 6 என்ற சீனக் கப்பல் இலங்கையை வந்தடைந்ததையடுத்து மற்றுமொரு சீனக்கப்பல் இலங்கையை வந்தடையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.