சீன திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்!

இலங்கையில் காட்டு மரங்களில் இருந்து கரி தயாரிக்கும் சீனாவின் திட்டத்தை எதிர்த்து தனமல்வில பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

மொனராகல - தனமல்வில, அரம்பேகேம ஆகிய இடங்களில், குறித்த கரி தொழிற்சாலையை திறப்பது சில சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதாக கிராம மக்கள் எதிர்ப்பு காட்டியதை அடுத்து, இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

எனினும் சீனாவின் இந்த திட்டமானது முழுமையாக அரசால் அங்கீகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

20 களிமண் உலைகளைக் கொண்ட முதலீட்டு சபையின் இந்தத் திட்டம் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது என பல குற்றச்சாட்டுக்கள் பொதுமக்களால் முன்வைக்கப்படுகின்றன.

இதற்கமைய சீன திட்டத்தின் தள மேலாளரின் கூற்றுப்படி, இதில் 60 சதவீதம் இலங்கைக்கும் 40 சதவீதம் சீனாவிற்கும் வழங்கப்பட்ட கூட்டாண்மை முயற்சியாக இது காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இங்கு ஒவ்வொரு உலைகளும் எரிக்கப்படும் 4.5தொன் மரத்திற்கு 1தொன் கரியை உற்பத்தி செய்ய முடியும் எனவும் எவ்வாறாயினும், வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் எந்தவொரு அனுமதியையும் வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கு கழிவு மரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் என்று தள மேலாளர் கூறிய போதிலும், கடந்த வாரம், செயலிழந்த உலைகளுக்குள் தேக்கு உட்பட்ட பெறுமதியான மரக் கட்டைகள் இருப்பது கண்டறிந்ததாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த திட்டத்திற்கு உட்பட்ட அரம்பேகெம பகுதியில் பல மாதங்களாக நீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும், கிணறுகள் பெருமளவில் வறண்டு வருகின்றன எனவும், மக்கள் தண்ணீருக்காக கிணறுகளை அண்டைய வீட்டாருடன் பகிர்ந்து கொள்கின்றனர் எனவும் பயிர்களின் சேதம் கடுமையாக உள்ளது என்றும் இதன் காரணமாக யானைகள் போன்ற வன விலங்குகள், உணவு தேடி கிராமத்துக்குள் வீடுகளுக்குள் ஊடுருவத் தொடங்கியுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த தொழிற்சாலைக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களும் இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

அதேவேளை, சீனாவின் ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான அனுமதியை பாதுகாப்பு அமைச்சு வழங்கியமை இந்திய தரப்புக்கு விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிவிவகார அமைச்சு மற்றும் நாரா அமைப்பு விடுத்த கோரிக்கைக்கு அமைய குறித்த கப்பலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேணல் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சீன ஆய்வுக் கப்பலைக் கொண்டு நாரா நிறுவனம் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாகவும், குறித்த கப்பல் இலங்கைக்கு அடுத்த மாதம் வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.