இலங்கை கிரிக்கெட் அணியின் மேலும் இரு வீரர்கள் மீதும் குற்றச்சாட்டு


ரி20 உலக கிண்ணப் போட்டியில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது இடம்பெற்ற பல சம்பவங்களின் அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் அணியின் மற்றுமொரு வீரரான பானுக ராஜபக்ச மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அயர்லாந்துக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக பானுகா ராஜபக்ச அறையில் இல்லாத சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அதன்படி, போட்டியில் பங்கேற்பதற்காக பேருந்து புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாக பானுக பேருந்துக்கு வந்ததாக தெரிய வந்துள்ளது.

இது தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவிற்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே இலங்கை அணியின் சகல துறை வீரர் சாமிக்க கருணாரத்ன, சிட்னி நகரில் கசினோ சூதாட்ட விடுதி ஒன்றில் மோதலை ஏற்படுத்திக்கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தனுஷ்க குணதிலக்க தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பலத்த அவமானத்தை சந்தித்துள்ள நிலையில் மற்றும் இரண்டு வீரர்கள் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளமை மேலும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.