விஜயகாந்தின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய சாணக்கியன்

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தே.மு.தி.கவின் முன்னாள் தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் அவரது கட்சி அலுவலகத்தில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்திற்கு நேற்றைய தினம் (13) நேரில் சென்று வட கிழக்கு மக்கள் சார்பாக அஞ்சலி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதன் பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “ விஜயகாந் 80 மற்றும் 90 ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ போராட்டத்துக்கு மிக முக்கிய ஆதரவு வழங்கியவர்களில் மிக முக்கியமான ஒருவர்.

எமக்கான உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியானவர். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும் எனில் அவரது ஆதரவாளர்கள் ஈழத் தமிழர்களுடன் மற்றும் ஈழ தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து இவ் போராட்டத்துக்கு வலு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.” என தெரிவித்தார்

பல நாட்கள் சுகவீனமுற்றிருந்த விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 28ஆம் திகதி காலமானார்.

விஜயகாந்தின் நினைவிடத்துக்கு அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், தே.மு.தி.க தொண்டர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.