தாய்லாந்தில் பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய பூனை கைது செய்யப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து நாட்டின் பேங்கொக் பகுதியில் நபர் ஒருவர் ஷார்ஹேர் வகை பூனை ஒன்றை நுப் டாங் என பெயரிட்டு ஆசையாக வளர்த்து வந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் இந்த பூனை காணாமல் போயுள்ளது. அதை தேடியலைந்த உரிமையாளர் இதுகுறித்து பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார்.
காணாமல் போன புனை நுப் டாங் பல இடங்களில் பயணித்து பூங்கா ஒன்றில் இருந்துள்ளது. பார்க்கவே அழகாக இருக்கும் அந்த பூனை ஆதரவின்றி இருந்ததை கண்ட அப்பகுதி பொலிஸார் அதை தூக்க சென்றபோது அது அவர்களை நகத்தால் பிறாண்டி தாக்கியுள்ளது.
இதனால் நுப் டாங் மீது வழக்குப்பதிவு செய்த பொலிஸார் அதை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதியாக பூனை இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் அவர்கள் வெளியிட்டு பூனை உரிமையாளர் தங்களை தொடர்பு கொள்ள வேண்டுமென தெரிவித்திருந்தனர்.
மிகவும் அழகான நுப் டாங்கை பார்த்த சிலர் அதன் உரிமையாளர் வராவிட்டாலும் தாங்களே அதை தத்தெடுத்துக் கொள்வதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் பொலிஸார் அதற்கு மறுத்து விட்டனர். இந்நிலையில் நுப் டாங் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள விடயத்தை அறிந்த அதன் உரிமையாளர், பொலிஸ் நிலையத்துக்கு சென்று தனது பூனையை தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரியுள்ளார்.
இதனையடுத்து உரிமையாளரிடம் கையெழுத்து வாங்கிய பொலிஸார் பூனையிடமும் அதன் கால் பாதங்களினால் கையெழுத்து வாங்கிக் கொண்டு பிணையில் விடுதலை செய்துள்ளனர்.