தபால் திணைக்களத்தின் அனைத்து பணியாளர்களின் விடுமுறையும் இரத்து!

சேவையை தடையின்றி பேணுவதற்காக தபால் திணைக்களத்தின் அனைத்து பணியாளர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளது.தபால் திணைக்களத்தினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.சில கோரிக்கைகளை முன்வைத்து தபால் சேவையாளர்கள் நேற்று பிற்பகல் 4 மணிமுதல் முதல் அடையாள பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த பணிப்புறக்கணிப்பானது இன்று நள்ளிரவு 12 மணி வரையில் முன்னெடுக்கப்படும் என ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை இணைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.

தபால் சேவையினை தனியார் மயப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றமை, தனியார் ஊடாக தபால் விநியோக சேவையினை முன்னெடுப்பதற்கு எடுத்துள்ள தீர்மானம் மற்றும் சேவையாளர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றமை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

நாடளாவிய ரீதியில் உள்ள 27 ஆயிரத்திற்கும் அதிகமான தபால் சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை இணைப்பாளர் சிந்தக்க பண்டார குறிப்பிட்டுள்ளார்.