இந்த நாட்டின் பழமையான மற்றும் பழங்குடி அரசியல் கலாசாரத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மீது நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்களிப்பில் இருந்து விலகியதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இன்று (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இந்த சட்டமூலத்தின் ஊடாக, உலகம் பாரிய அபிவிருத்தியை நோக்கி முன்னேறி வருகின்ற போதிலும் இலங்கை பின்னோக்கி பயணிப்பதாக தெரிவித்தார்.
“அமெரிக்கா மற்றும் கனடா போன்ற பல வளர்ந்த நாடுகளில், இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பவர் அரச அதிகாரியாகவோ அல்லது நாடாளுமன்றத்தில் நுழைவதற்கோ எந்தத் தடையும் இல்லை.
இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ள முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தொடர்பில் கருத்து தெரிவித்த காரியவசம், இந்த விடயம் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படுவதற்கு முன்னரே அவர் எம்.பி பதவியில் இருந்து விலகியதாக தெரிவித்தார்.
"எனவே, 22 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதால் அவர் எந்த பிரச்சனையையும் எதிர்கொள்ளவில்லை" என்று காரியவசம் விளக்கினார்.
இந்த நடவடிக்கையானது சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை எனவும், மாறாக இது தேசத்தின் முன்னேற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் பிளவு ஏதும் இல்லை எனவும், உறுப்பினர்கள் தமது கருத்தை சுதந்திரமாக தெரிவிக்கும் உரிமை இருப்பதாகவும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார். எனினும், எந்தவொரு கட்சி உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய விரும்பவில்லை என தாம் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்