பிரித்தானிய பெண் - இலங்கையிலிருந்து வெளியேற்றுமாறு ஜனாதிபதி ரணில் உத்தரவு

காலிமுகத்திடல் போராட்டத்துக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர்தலை மேற்கொண்டு சர்ச்சைக்கு உள்ளான பிரித்தானிய இன்ஸ்டாகிராமர் கெய்லி பிரேசரை உடனடியாக இலங்கையிலிருந்து வெளியேற்றுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரித்தானிய சுற்றுலாப் பயணியை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான ஆவணங்களில் கடந்த வாரம் ஜனாதிபதியும் கையொப்பமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 2ஆம் திகதி பத்தரமுல்லையில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்ற, குடிவரவு அதிகாரிகள் குழுவொன்று, பிரேசரின் பயண ஆவணங்களை விசாரணைக்காக திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறும், ஏழு நாட்களுக்குள் விளக்கமளிக்குமாறும் அவருக்கு அறிவித்துள்ளது. 

எனினும் குடிவரவு அதிகாரிகள் கெய்லி பிரேசரின் இல்லத்தில் எப்படி விசாரிக்கிறார்கள் என்பதை காட்டும் வகையில் அவரால் எடுக்கப்பட்ட நேரடி காணொளியொன்று வெளியாகியிருந்தது. 

இது பல தளங்களில் வைரலாகி, காலிமுகத்திடலில் நடந்த நிகழ்வுகளை ஆவணப்படுத்தியதற்காக ஒரு சுற்றுலாப் பயணியை அரச அதிகாரிகள் கைது செய்ய முயற்சிக்கிறார்கள் என்ற சர்ச்சையை உருவாக்கியது.

இத்தனையடுத்து விசாரணையை எதிர்கொள்வதற்காக ஆகஸ்ட் 11ஆம் திகதி பிரேசர் குடிவரவுத் தலைமை அலுவலகத்திற்கு வந்தபோது அவரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதுடன், ஆகஸ்ட் 15ஆம் திகதி அல்லது அதற்கு முன்பாக சட்டப்பூர்வமாக இலங்கையை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் காலக்கெடுவை வழங்கினர்.

இருப்பினும், அவர் மேலும் நாட்டில் இருக்க விரும்புவதாகக் கூறி குடிவரவுத் திணைக்களத்தின் உத்தரவை செல்லுபடியாகாத படி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

எவ்வாறாயினும், அத்தகைய கோரிக்கைக்கு எந்த காரணமும் இல்லை என்று கூறி இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன், பிரேசர் காணாமல்போயுள்ளதாகவும், தாம் கைது செய்யப்படுவதை அவர் தவிர்த்து வருவதாகவும் குடிவரவுத் துறை தரப்புகள் தெரிவித்தன.

குடிவரவுத் துறை தகவல்களின்படி, மருத்துவ காரணங்களுக்காக 2019ஆம் ஆண்டு அவர், இலங்கைக்கு வந்திருந்தார். விசா விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளில் முதுகுவலியால் அவதிப்படுவதாகவும், சுதேச மருந்துகளை நாடியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதிகாரிகள் சமீபத்திய விசாரணைகளை நடத்தியபோது, ​​அந்த வெளிநாட்டவர் விசாவில் கூறியபடி சுதேச மருத்துவத்தை நாடவில்லை எனவும், மாறாக மருந்துகளின் பல்வேறு விளம்பரப் பணிகளிலும், உளவியல் மற்றும் வயது வந்தோருக்கான உறவுப் பிரச்சினைகள், போதைப்பொருள் தொடர்பான சிகிச்சையாளராக இருந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்தச் சேவைகளை மேம்படுத்துவதற்காக ஒரு இணையதளத்தைப் பயன்படுத்திய அவர், மனநல மருத்துவத்தில் நிபுணர் மற்றும் குணப்படுத்துபவர் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். 

விசா நிபந்தனைகளை மீறியதாலேயே இலங்கையை விட்டு வெளியேறுமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், காலிமுகத்திடல் போராட்டத்தில் அவர் ஈடுபட்டதாக விசாரணை நடத்தி வருவது உண்மைக்குப் புறம்பானது என்றும் குடிவரவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், காணாமல்போன சுற்றுலாப் பயணியை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு உதவுமாறு குடிவரவுத் திணைக்களம் பொதுமக்களையும், பொலிஸாரையும் கோரியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக குடிவரவு குடியகழ்வு பிரதி கட்டுப்பாட்டாளர் எம்.ஜி.வி.காரியவசம் மற்றும் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.