லண்டனில் இருந்து சென்னை சென்ற விமானத்தில் கோளாறு : 360 பயணிகளுடன் நடுவானில் வானில் வட்டமடித்த விமானம்

லண்டனில் (London) இருந்து சென்னைக்கு (Chennai) வந்து கொண்டிருந்த விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதனால் விமானம் மீண்டும் லண்டனுக்கே திரும்பி அனுப்பப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால் லண்டன்- சென்னை இடையேயான விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லண்டனில் இருந்து 360 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787-8 விமானத்திலே இவ்வாறு நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

லண்டனில் தரையிறக்கப்பட்ட விமானம்

இதனையடுத்து விமானி லண்டன் விமான நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில் புறப்பட்ட 37 நிமிடத்தில் மீண்டும் லண்டனில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்த நிலையில் விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் சென்னை வராமல் மீண்டும் லண்டனுக்கே திரும்பி சென்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போது, லண்டன், சென்னை இடையேயான விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.