இந்தியாவிற்கு பாலம் அமைப்பு - கர்தினால் மல்கம் ரஞ்சித் போர்க்கொடி

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் பாலம் அமைக்கப்படுமானால் பொதுவாக்கெடுப்பு நடத்தி மக்களின் அனுமதியை பெற வேண்டும் என  கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.வரலாற்றில் இருந்து இந்நாட்டை ஆட்சியாளர்கள் வெளிநாட்டினருக்கு காட்டிக் கொடுத்துள்ளனர் எனவும் அவர் இதன்போது குற்றம்சாட்டினார்.

ராகம தெவத்த தேசிய பசிலிக்காவில் இடம்பெற்ற ஆராதனை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கர்தினால் மேற்கண்டவாறு தெரிவித்தார்.மேலும் கருத்து தெரிவித்த கர்தினால் ,

“நாம் எமது நாட்டின் துண்டுகளை வெவ்வேறு நாடுகளுக்கும் படைகளுக்கும் விற்று, இந்த நாட்டை அழிவுக்கு இட்டுச் செல்ல பல்வேறு முட்டாள்தனமான முடிவுகளை எடுக்கிறோம்.

தற்போது இந்தியாவிற்கு பாலம் கட்டுகிறார்கள். இப்போது இந்தியாவில் இருந்து நமக்கு என்ன பிரச்சனைகள்? ஒருமுறை பருப்பு கொண்டு வந்தது நினைவிருக்கிறதா. இலங்கைக்கு இராணுவம் அனுப்பப்பட்டது. அவர்களின் கருத்தின் அடிப்படையில் சில விஷயங்களைச் செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா. அவர்களை எங்கள் தோளில் ஏற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இன்னொரு பாலம் கட்டினால் நன்றாக இருக்கும்.

இந்த முட்டாள்தனமான கதைகளை யார் சொல்வது? நமது நாடு எப்போதும் சுதந்திர நாடாகவே இருந்து வருகிறது. நாங்கள் எந்த அரசுக்கும் அடிமையாக இருந்ததில்லை. நாம் வேறொரு நாட்டிலிருந்து பிரிந்து செல்லவில்லை. அன்று முதல் இலங்கை தனி நாடாக இருந்தது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒப்பந்தங்களை இந்நாட்டு மன்னர்கள் கையாண்டார்கள், ஆனால் நாம் யாரையும் அடிமைப்படுத்தவில்லை.

அன்பான சகோதர சகோதரிகளே, நம் நாடு அந்நிய தேசத்திடம் வீழ்ந்தால், அது நமது தலைவர்களின் துரோகத்தால் வீழ்ந்தது. நாளையும் இதே நிலை ஏற்படலாம்.

இந்த பாலம் கட்டும் யோசனைக்கு பொதுமக்கள் கருத்துக்கணிப்பு நடத்த வேண்டும். பொதுமக்கள் கருத்து இல்லாமல் இவற்றைச் செய்வது தவறு. இன்று நம் நாட்டை நினைத்து வருந்துகிறோம்.

சுதந்திரம் பெற்ற நாம் இப்போது சுதந்திரத்தை இழக்க வேண்டியுள்ளது. அனைத்து நாடுகளுக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வழங்குவோம். துண்டு துண்டாக உடைப்போம். அப்போது நமக்கு எதுவும் மிச்சம் இருக்காது. இது ஒரு நோய்."என்றார்.