ஈரானிய தலைநகர் தெஹ்ரானுக்கு அருகிலுள்ள கோஜிர் ஏவுகணை உற்பத்தி நிலையத்தை இஸ்ரேல் தாக்குவதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2024 ஒக்டோபரில் இஸ்ரேல் அதே தளத்தைத் தாக்கியுள்ளது.
தெஹ்ரானின் ஒரு பகுதியை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் பாதுகாப்பு படை குடியிருப்பாளர்களை எச்சரித்த பின்னர், அப்பகுதியில் தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றது.
அதன்படி தெஹரான் பகுதியில் இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஈரானிய தலைநகரின் சில பகுதிகளில் வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தெஹ்ரானின் 18ஆவது மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு ஐடிஎஃப் சற்று முன்னர், உடனடியாக வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இஸ்ரேலின் 60 போர் விமானங்கள் ஈரானின் மையப் பகுதியில் உள்ள பாலிஸ்டிக் ஏவுகணைகளை குறிவைத்து, மிகப்பெரிய தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன.
இந்த தகவலை இஸ்ரேலின் பாதுகாப்புப் படைகளின் பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் எஃபி டெஃப்ரின் உறுதிப்படுத்தியுள்ளார்.
தாக்குதலில் அழிக்கப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி தாக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த நாட்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின் விளைவாக, ஈரானிய படைகள் மேற்குப் பகுதியிலிருந்து ஈரானின் மையப்பகுதிக்கு பின்வாங்கியுள்ளன.
இப்போது அவர்கள் இஸ்பாஹானில் இருந்து ஏவுகணைகள் ஏவ முயற்சிக்கின்றனர். ஆனால், அவர்கள் எங்கு சென்றாலும் நாங்கள் அவர்களைத் தொடர்ந்து தாக்குவோம், என்றார்.
மேலும், இஸ்ரேலின் இராணுவம் வெளியிட்ட தகவலின்படி, இஸ்ரேலிய விமானப்படை 12 இடங்களில் உள்ள ஈரானிய ஏவுகணை களஞ்சியங்கள் மற்றும் ஏவுதளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேலின் பாதுகாப்புப் படைகள், ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக ஏவுகணைகளை தயாரிக்க எடுத்த முயற்சிகளை காட்டும் காணொளி சாட்சிகளை வெளியிட்டுள்ளது.
அதில், அந்த முயற்சிகள் அடையாளம் காணப்பட்டதும், அதன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காட்சியும் அடங்கியுள்ளது. மேலும், மற்றொரு காணொளியில் ஈரானின் ஒரு விமான எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காட்சியும் இடம்பெற்றுள்ளது.