பேர வாவியில் உயிரிழந்து கிடந்த பறவைகள் - காரணம் குறித்து வௌியான தகவல்



கொழும்பு பேர வாவியில் விலங்குகள் உயிரிழப்பதற்கான காரணத்தைக் கொழும்பு மாநகர சபை வெளியிட்டுள்ளது.
 
இதன்படி பாக்டீரியா தொற்று காரணமாகவே குறித்த விலங்குகள் உயிரிழந்துள்ளதாகப் பரிசோதனைகளின் ஊடாக உறுதியாகியுள்ளது.
 
உயிரிழந்த விலங்குகளின் திசுக்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் கொழும்பு மாநகர சபையின் தலைமை கால்நடை வைத்தியர் முகமது இஜாஸ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கொழும்பு, பேர வாவியில் மர்மமான முறையில் பறவைகள் உயிரிழக்கின்றமைக்கான காரணம் தொடர்பில் உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மூன்று நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்திருந்தது

இந்த அறிக்கை மீன்பிடி மற்றும் நீர்வள அமைச்சிற்குச் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வு பிரிவின் தலைவர் ஷியாமலி வீரசேகர தெரிவித்திருந்தார்

எவ்வாறிருப்பினும், உயிரிழந்த 25 பறவைகளில், 07 பறவைகளின் உடல்கள் மேலதிக பரிசோதனைகளுக்காக ஹோமாகம கால்நடை புலனாய்வு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பாக்டீரியா தொற்று காரணமாகவே குறித்த விலங்குகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.