புளியம்பொக்கணையில் பார ஊர்தியுடன் சைக்கிள் விபத்து - முதியவர் பலி!

கிளிநொச்சி புளியம்பொக்கணை பகுதியில் பார ஊர்தியுடனான விபத்தில் சிக்கி துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து சனிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டாவளை வெளிகண்டல் சந்திப்பகுதியில் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நெல்லை வீதியில் உலர விடப்படும் நிலையில் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் புளியம்பொக்கணை பகுதியில் இருந்து கண்டாவளை நோக்கி பயணித்த முதியவர் மீது பரந்தன் பகுதியில் இருந்து நெல் கொள்வனவுக்காக  புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த பாரஊர்தி மோதியுள்ளது.இவ்விபத்தில் வட்டகச்சி பகுதியைச் சேர்ந்த கதிரவேலு யாதவராசா என்ற 58 வயதுடைய 6பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிகவிசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கடந்து சில நாட்களிற்கு முன்னர் பரத்தன் பூநகரி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மக்கள் பயன்பாடு உள்ள பிரதான வீதிகளில் நெல் உலர்த்தப்படுவதால் இவ்வருடம் கிளிநொச்சியில் இடம்பெற்ற இரண்டாவது விபத்து மரணம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.