நாட்டை உலுக்கிய ஐவர் படுகொலை சம்பவம்: இருவர் கைது

பெலியத்தையில் ஐந்து பேரைக் கொலை செய்வதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் விசேட அதிரடிப் படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி - வஞ்சாவல பகுதியில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்காலை பெலியத்த பிரதேசத்தில் கடந்த திங்கட்கிழமை காலை 08.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ‘எங்கள் மக்கள் கட்சி’ என்ற அரசியல் கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்றையவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

பச்சை நிற கெப் வாகனத்தில் வந்த குழு ஒன்று வெள்ளை நிற டிஃபென்டரில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கொலை செய்வதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் மேலும் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.