பசில் அதிரடி- அமெரிக்க குடியுரிமையை துறக்க முடிவு


பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தனது அமெரிக்க இரட்டைக் குடியுரிமையை கைவிட தீர்மானித்துள்ளதாக மிகவும் நம்பகமான வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

அதன்படி, தற்போது அது தொடர்பான ஆவணங்களைபசில் ராஜபக்ச தயாரித்து வருவதாக தெரியவந்துள்ளது அந்த ஆவணங்களை அமெரிக்க அதிகாரிகளிடம் கையளித்ததன் பின்னர் பசில் ராஜபக்ச இலங்கை வரத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தனது முழு நேரத்தையும் அரசியலுக்காக அர்ப்பணிக்கவும், வந்தவுடன் மொட்டுவை மறுசீரமைக்கவும் அவர் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

பசில் ராஜபக்சவை குறிவைத்து 22வது திருத்தம் கொண்டு வரப்பட்டதாகவும் அவரது அரசியலை முடிவுக்கு கொண்டு வரவே இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டதாகவும் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதேவேளை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராவதற்கோ எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனவே இரட்டைக்குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கக்கூடாது என்ற 22வது திருத்தச்சட்டத்தினால் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.