அரசுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை

மின்கட்டண திருத்தத்தில் நேற்று(20) அதிகரிப்பு ஏற்பட்ட போதிலும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவில்லை.ஆனால் எரிபொருள், எரிவாயு அல்லது மின்சார கட்டணங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டால், பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டியிருக்கும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.கே. ஜயவர்தன மேலும் தெரிவிக்கையில்,

அதிக செலவினங்களால் தற்போது பேக்கரி தொழில் நலிவடைந்துள்ளது. “வழக்கமாக இலங்கையில் கோதுமை மாவின் விலை அதிகரித்தால் மட்டுமே பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிப்போம். கோதுமை மாவின் விலையில் மாற்றம் இல்லை.

ஆனால் இந்தத் தொழிலுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களின் விலையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எரிவாயு விலை 2 மடங்கு அதிகரித்துள்ளது. எரிபொருளின் விலை கிட்டத்தட்ட 2 மடங்கு அதிகரித்துள்ளது. மின் கட்டணம் சுமார் 200 சதவீதம் அதிகரித்துள்ளது. நேற்று மூன்றாவது முறையாக மின் கட்டணம் அதிகரித்துள்ளது.

ஆனால் நாங்கள் எந்த அதிகரிப்பையும் செய்யவில்லை. குறிப்பாக, வரிக் கொள்கையானது பேக்கரி உரிமையாளர்களை மிகவும் அநியாயமாக பாதித்துள்ளது. ரொட்டிக்கு 2.5 சதவீதம் கொடுக்க வேண்டும். ரொட்டி தவிர அனைத்து பேக்கரி பொருட்களுக்கும் 17.5 சதவீதம் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை எந்த நேரத்திலும் அரசுக்கு செலுத்த முடியாது. இந்த பணத்தை செலுத்தினால், பேக்கரி தொழிலை நடத்த முடியாது.

பேக்கரி பொருட்களின் விலை நுகர்வோர் வாங்கும் அளவில் உள்ளது. அதன் காரணமாக நேற்று மின்சாரம் அதிகரிக்கப்பட்டாலும், அதிகரிப்பு எதுவும் செய்ய மாட்டோம் என தீர்மானித்தோம். ஆனால், அரசுக்கு சிவப்பு விளக்கை காட்டுகிறோம். இனிமேல் எரிவாயு, டீசல், மின்கட்டணம் அதிகரித்தால் கண்டிப்பாக விலையை உயர்த்த வேண்டியிருக்கும்" என்றார்