ஆயிஷா படுகொலை - கட்டிலுக்கு அடியில் சேறு படிந்திருந்த சாரம் - சந்தேக நபர் கைது

பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களில் ஒருவர் கீரை தோட்ட தொழிலாளி எனத் தெரிய வந்துள்ளது. குறித்த நபரின் வீட்டில் கட்டிலுக்கு அடியில் சேறு படிந்திருந்த சாரம் ஒன்றையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

கீரை தோட்டத்தை அண்டிய காணியில் சதுப்பு நிலம் ஒன்றிலேயே, படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதென காவல்துறையினர் தெரிவித்தனர்.

படுகொலை செய்யப்பட்ட பாத்திமா ஆயிஷாவின் பிரேதப் பரிசோதனை நேற்று பாணந்துரை வைத்தியசாலையில் நடைபெற்றது. இதேவேளை, சிறுமியின் கொலை தொடர்பில் பல பிரிவுகளின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குற்ற விசாரணை திணைக்களம் மற்றும் மேலும் ஐந்து காவல்துறையினர் கொண்ட குழுக்களின் கூட்டு முயற்சியில் இந்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

அதற்கமைய, அப்பகுதியில் சிசிடிவி கமராவின் காட்சிகள் மற்றும் போதைப்பொருட்களுடன் தொடர்புடைய நபர்கள் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அப்பகுதியிலுள்ள தொலைபேசி சமிக்ஞை கோபுரங்களிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கபல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறுமியை கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் அந்த பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்த ஒருவரையும் மற்றுமொருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பண்டாரகம, அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த பாத்திமா ஆயிஷா அக்ரம் என்ற சிறுமி கடந்த 27ஆம் திகதி தனது வீட்டுக்கு அருகில் உள்ள கோழிக்கடையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது காணாமல் போனார்.

சிறுமியின் சடலம் மறுநாள் பிற்பகல் வீட்டிற்கு சற்று அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் கண்டெடுக்கப்பட்டது, மேலும் சம்பவம் தொடர்பாக குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அயலவர்கள் உட்பட 30 பேரின் வாக்குமூலங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன.