வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்று, போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த 2 சந்தேகநபர்களை மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மாளிகாவத்தை மற்றும் ஹொரணை பகுதிகளில் வசிக்கும் 30 மற்றும் 36 வயதுடையவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விசாரணையின் போது, அனுராதபுரம் பொலிஸ் பிரிவில் வாடகை அடிப்படையில் ஒரு வேனைப் பெற்று அதை 1.04 மில்லியன் ரூபாய்க்கும், பொரளை பொலிஸ் பிரிவில் வாடகை அடிப்படையில் ஒரு காரை பெற்று 9 மில்லியனுக்கும் விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும் பாணந்துறை பொலிஸ் பிரிவில் வாடகை அடிப்படையில் ஒரு காரைப் பெற்று அதனை 5.8 மில்லியனுக்கு, மொரகஹஹேன மற்றும் வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் வாடகை அடிப்படையில் 2 கார்களைப் பெற்று அதனை 5 மில்லியனுக்கும், 4.2 மில்லியனுக்கும் விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே இதுதொடர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.