டக்ளஸ் மீது தாக்குதல் - இருவருக்கு விதிக்கப்பட்டது கடூழிய சிறை


1998 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி களுத்துறை சிறைச்சாலையில் வைத்து தற்போதைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் நடத்தினர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 22 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, இன்று (26) தீர்ப்பளித்தார்.

குறித்த இருவரும் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்தே, அவர்களுக்கு எதிராக இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை சிறைச்சாலையில் வைத்து தாக்குதல் 

அத்துடன் குற்றவாளிகள் இருவருக்கும் தலா 40 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, பிரதிவாதிகள் இருவரும் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தலா 1 இலட்சம் வீதம் நட்டஈடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

களுத்துறைச் சிறைச்சாலையில் 1998 ஆம் ஆண்டு தமது விடுதலையை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டுவந்த நிலையில் அப்போது அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா  கைதிகளை பார்வையிட்டு கலந்துரையாடச் சென்றிருந்த சமயமே கைதிகளினால் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார்.

1998 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி களுத்துறை சிறைச்சாலையில் வைத்து டக்ளஸ் தேவானந்தாவை தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த தாக்குதல் தொடர்பில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையிலேயே, மேற்குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.