அஸ்வெசும - 400,000 புதிய விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான 400,000 புதிய விண்ணப்பங்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர்  

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான பயனாளர்களை தெரிவு செய்வதில் பல்வேறு தரப்பினரிடமும் இருந்து பெறப்பட்ட முன்மொழிவுகளுக்கமைய அதில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், கடந்த காலங்களில் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான நிபந்தனைகள் கடுமையாக காணப்பட்டமையினால் கொடுப்பனவுகளை பெறாத பயனாளர்கள் இந்த முறை விண்ணப்பிக்க முடியும் என்றும்  நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை 1,700,000 கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள மற்றும் தற்காலிகமாக வருமானத்தை இழந்த தரப்பினர்களை ஒன்றிணைத்து 8 இலட்சம் குடும்பங்களுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிவரை செல்லுபடியாகும் வகையில் 5,000 ரூபா கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தகவல்களை உறுதிப்படுத்தும் செயன்முறையின் பின்னர் அஸ்வெசும பயனாளர் பட்டியலில் அடையாளம் காணப்படாத சிறுநீரக நோயாளர்கள் மற்றும் விசேட தேவையுடையோருக்கு தலா 7500 ரூபாவும், முதியோர்களுக்கு 3000 ரூபாவும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்படவுள்ளது.