யுக்திய சுற்றிவளைப்பில் சிறிய புள்ளிகளை கைது செய்து நாடகம்...! பிரதான நபர்களை பிடியுங்கள்...! சஜித் தரப்பு வேண்டுகோள்

பதில் பொலிஸ் மா அதிபரும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் முன்னெடுத்து வரும்  யுக்திய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் சிறிய புள்ளிகளை கைது செய்து, நாடகம் நடத்தாது பிரதான கடத்தல்காரர்களை கைது செய்து உண்மையான போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(11) இடம்பெற்ற  ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

போதைப்பொருள் கடத்தலை நாட்டிலிருந்து இல்லாதொழிக்க,போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் பிரதான நபர்களை கைது செய்ய வேண்டும்.போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை உரிய முறையில் முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறேன்.

14 மாதங்களுக்கு தேவையான அரிசி இந்த போகத்தில் கிடைக்கும் என விவசாய அமைச்சரும்,விவசாய திணைக்களமும் தெரிவித்துள்ளன.

இவ்வாறு இருக்கும் நிலையில் இந்தியாவில் இருந்து கீரி சம்பா  இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.இதனால் தேசிய நெற்செய்கையாளர் கடும் நெருக்கடிக்கு ஆளாக நேரிடும்.

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான வரியை கிலோவுக்கு 65 ரூபாவில் இருந்து 1 ரூபா வரை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதால்,பெரும் போகத்தில் நெல் விலை குறைவடைந்து நியாயமான விலைக்கு நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும்.

வரி குறைப்பால் பாரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களே இதன் பலனை அடைவர்.இதன் மூலம் நுகர்வோரும் விவசாயிகளுமே மிகவும் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்படுகின்றனர் எனவும் தெரிவித்தார்.