நடு வீதியில் யாழ் இளைஞனுக்கு இராணுவம், காவல்துறை மரண அடி..! வெளியான காணொளி - மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

யாழ்ப்பாணம் மானிப்பாயில் காவல்துறையினர், இராணுவத்தினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடி படையினர் இணைந்து இளைஞன் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார்.

மானிப்பாய் ஆலடி சந்தியில் இராணுவத்தினர் மற்றும் காவல்துறை கடமையில் இருந்த வேளை இளைஞன் ஒருவர் தலைக்கவசம் அணியாது வந்தமை தொடர்பில் காவல்துறையினருக்கும் இளைஞர் ஒருவருக்குமிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு கடமையில் இருந்த காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் இளைஞன் மீது சரமாரியாக தாக்குதலை மேற்கொண்ட வேளை வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்த காவல்துறை விசேட அதிரடி படையினரும் இணைந்து தாக்குதலை மேற்கொண்டனர்.

தாக்குதல் சம்பவத்தினை அடுத்து அங்கு மக்கள் கூடியமையால் இளைஞனை கைது செய்த காவல்துறையினர் , மானிப்பாய் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று, இரத்த காயங்களுடன் நீண்ட நேரம் தடுத்து வைத்திருந்த பின்னர் யாழ்.போதனா வைத்திய சாலையில் இளைஞனை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , முதற்கட்டமாக தாக்குதலுக்கு இலக்கான இளைஞனிடம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளதாகவும் , சட்ட வைத்திய அதிகாரியிடம் இருந்து சட்ட மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொண்டு மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார்.