பாதாள உலகக் குழுவிற்கு ஆயுதங்கள் விற்பனை! பின்னணியில் சிக்கிய சிறிலங்கா இராணுவத்தினர்

பாதாள உலகக் குழு உறுப்பினர்களுக்கு இராணுவ முகாம்களிலிருந்து எவ்வாறு ஆயுதங்கள் செல்கின்றன என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், அண்மையில் அஹுங்கல்ல பிரதேசத்தில் பாதாள உலக குழு உறுப்பினர்களினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான ஆயுதம் கிளிநொச்சி இராணுவ முகாமிலிருந்து வழங்கப்பட்டிருந்தமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

அதாவது, சுமார் மூன்று லட்சம் ரூபாவிற்கு இந்த ஆயுதம் வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இராணுவ அதிகாரி ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுக்கு ரி56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பாதாள உலகக் குழுவினருக்கு அதிநவீன ஆயுதங்கள் இவ்வாறு கிடைக்கப்பெறுவது பாரிய ஆபத்தான விடயம் என தெரிவிக்கப்படுகின்றது.