இலங்கைக்கு உதவ அரபு நாடுகள் தயார் ஆனால் இந்த அரசாங்கம் இருக்கும்வரை அது சாத்தியமில்லை! வெளியாகிய தகவல்


எத்தனை கோடிக்கணக்கான அமெரிக்க டொலர்களையும் இலங்கை அரசுக்கு அள்ளிக்கொடுக்க பல அரபு நாடுகள் தயாராக இருக்கிறது.

ஆனால் எமது நாட்டின் தலைமைத்துவங்களுக்கு உதவிசெய்ய அவர்கள் ஆயத்தமாக இல்லை. என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.எம்.ஏ. ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

ஒருவருடைய பதவியை விட நாட்டில் வாழும் ஏறத்தாழ இரண்டு கோடி மக்களின் வாழ்க்கை மற்றும் எதிர்காலம் இங்கு கவனிக்கப்பட வேண்டியது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

காத்தான்குடியில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடனுக்கு மேல் கடன். கடனுக்கு வட்டி வேறு. இந்திய அரசு பெட்ரோலை ரஸ்யாவிடமிருந்து கொள்வனவு செய்து 40 வீத இலாபத்தை வைத்து நமது நாட்டுக்கு தருகிறார்கள்.

உதாரணமாக 500 மில்லியன் டொலரை தந்துவிட்டு 1000- 2000 மில்லியன் டொலர் பெறுமதியான இலங்கையின் சொத்தை எழுதி வாங்கிக்கொள்கிறார்கள்.

இந்த அரசாங்கம் ஆட்சியிலிருக்கும் ஒவ்வொரு நாளும் எமது நாடு பங்கரமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இப்போது நாங்கள் அனுபவித்துக்கொண்டிருப்பதல்ல கஷ்டம். இனித்தான் நாம் அதிக கஷ்டங்களை அனுபவிக்க போகின்றோம். இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்கு இந்த அரசாங்கம் தொடர்ந்தால் விளைவு மிகமோசமாக இருக்கும்.

இந்த அரசாங்கம் நாட்டின் நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக பதவிகளை இராஜினாமா செய்து, இந்த நாட்டை கட்டியெழுப்பும் திறமையானவர்களிடம் நாட்டை கையளித்துவிட்டு ஒதுங்க வேண்டும்.

சர்வதேச நாணய நிதியம் எமது நாட்டின் ஆட்சியாளர்கள் அதிகாரத்திலிருந்து ஒதுங்கும் வரை இலங்கைக்கு உதவ முன்வராது என்றார்.