அநுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் மோகன் கருணாரத்ன எதிர்வரும் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பல மோசடிகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை பெற்ற கைதியை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவித்த குற்றச்சாட்டின் பேரில் மேஹான் கருணாரத்ன கடந்த 8ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவின் இடைநீக்கம் செய்யப்பட்ட காலப்பகுதியில், அவரது சம்பளத்தில் பாதியை வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.
மேலும், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் எச்.எம்.என்.சி. தனசிங்க, தனது வழக்கமான பதவியின் கடமைகளுக்கு மேலதிகமாக பதில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகமாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.